Friday, March 17, 2006

அடிமைச்சிறை தகர்




பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?

மலர்களும் காயப்படுத்தாத
தென்றல் தான் பெண்கள்
புயலாய் மாற்றம் கொண்டால்
மலைகளையும் சாய்த்திடுவர்

இடுப்பொடிந்து நீயும்
தலைவணங்கியது போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நீயும்
வாழும் உலகைப் பார்
எல்லாமே உனக்குள்
அடங்குமடி பெண்ணே

பெண்கள் மீது திணிக்கப்படும்
பாலியல் வன்முறை
ஆண்கள் இச்சை தீர்ந்தபின்
சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும்
விலங்கினமா பெண்கள்?

அடிமை சிறை தகர்த்து
சிறகுகள் முளைத்து
சுதந்திர வானில் நீயும்
பறந்திட வேண்டாமா?

அடிமைத்தனத்தின் ஆணிவேர்
அறுத்து எறியப்படுமா?
ஆதிக்கத்தின் கொடும் பற்கள்
அடியோடு பிடுங்கப்படுமா?

இராவணர்கள் வாழ் பூமியில்
சீதையாய் நீ பிறந்ததால்
சிறைப்பட்டு வாழ்தல் வேண்டுமா?
இராமர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சந்தேகத் தீக்குளித்தல் வேண்டுமா?

அடிமை விலங்கோடு
நீ வாழ்ந்து மடிந்தால்
உந்தன் கல்லறையிலும்
பூக்கள் மலர்வது கூட
சுமையாகித்தான் போகும்

அடிமை விலங்கு அணிவித்து
வீட்டுக்குள் சிறை வைக்க
நாம் செய்த குற்றமென்ன - சொல்!
பெண்ணாய்ப் பிறந்ததுவோ?

சீரழிந்த உன் இனத்தை
சீர் திருத்த யார் வருவார்?
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாய் - சொல்!
காத்திருந்து என்ன பயன்?
களத்தில் இறங்கிவிடு

சுதந்திரமில்லாத பெண்ணாய்
நான்கு சுவற்றுக்குள்
கண்ணீர் சிந்தி என்ன பயன் - சொல்
கண்ணீருக்கு முதல் அணைபோடு

பெண்ணே உன் கண் எதிரே
சூரியன் காத்திருக்கிறான்
கண்களை மூடிக் கொண்டு
இருட்டுக்குப் பயந்தென்ன பயன் -சொல்
விழிகளை திறந்து விடியலை நோக்கு

என்றும் உங்களோடு
சிந்து...................

0 Comments:

Post a Comment

<< Home